ad

Friday, August 13, 2010

ரேடியோ சிலோன் ( RADIO CEYLON ).

தொடர்பாடல் என்னும் பதமானது , இலத்தீன் சொல்லான 'கொம்முனி கேயார்'(Communicare)   என்ற சொல்லிலிருந்து வந்த ஒரு பதமாகும்.
'கொம்முனி கேயார்' என்பது, பொதுமைப்படுத்தல், வெளிப்படுத்தல் ,பகிர்ந்து கொள்ளல், ஊடுகடத்தல் போன்ற அர்த்தங்களை தரும்.
வெகுசன தொடர்பாடல் என்பது பொதுமையை ஏற்படுத்த அல்லது சில கருத்துக்களை அநேகமான மக்களிடையே அல்லது கூட்டத்தினரிடையே பகிர்ந்து கொள்ள முனைவதாகும்.

தொடர்பாடல் எனும் தொடர் செயற்பாடு , ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல்களை கொடுக்க, சமிஞ்சை கொண்டு செல்ல , தெரிவிக்க அல்லது பெற உதவும் சாதனமாகும்.

இவ்வாறான தொடர்பாடல்களை  ஏற்படுத்த இப்பொழுது ஏராளமான நவீன தொடர்பாடல் சாதனைகள் இருக்கின்ற போதிலும் 'வானொலி' க்கென்று இன்றும் தனி இடம் இருப்பதை யாராலும் மறுக்கவும்  மறைக்கவும் முடியாது .

அப்படிப்பட்ட வானொலி இப்பொழுது இணையத்தள  பாவனை அதிகரித்த பின்னர் 'மலிந்து' காணப்படுவதாகவே தோன்றுகிறது காரணம் முன் போல வானொலி நிலையமொன்றை ஆரம்பிக்க அதிக பொருட்செலவுகளோ ஆளணி வளங்களோ இப்பொழுது தேவையில்ல, ஒருவரே இருந்த இடத்திலிருந்தே வானொலியை ஆரம்பிக்க கூடியதாக இருக்கிறது . இது ஒரு 'காத்திரமான போக்கு' என்று சொல்வதற்கு எனக்கு தெரியவில்லை. 

வானொலி வரலாற்றில் உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருப்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் .

இன்று சர்வேத ரீதியாக கூவிக்கொண்டு இருக்கின்ற அநேகமான  வானொலி குயில்கள்  'இலங்கை வானொலி' என்ற கூட்டிலிருந்து பறந்து சென்றவை என்பதை  யாராலும் மறுக்க முடியாது, அத்தோடு இலங்கையில் இப்போது சிறப்பாக தங்களது பணிகளை நடாத்திக்கொண்டிருக்கின்ற அனைத்து தனியார் வானொலி நிலையத்து நண்பர்களும் எதோ ஒரு வகையில் இலங்கை வானொலியோடு உறவுகளை வைத்திருப்பவர்கள்.

குறிப்பாக, இலங்கை வானொலி என்னும் ஒலிபரப்பு  ஆல  விருட்சத்தில்  விளைந்த எத்தனையோ ஒலிபரப்பாளர்கள் லண்டன் பீ பீ சி , கனடிய கீதவாணி, கனடா தமிழ் ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம், ஆஸ்திரேலிய இன்ப தமிழ் வானொலி , பிரான்சின் ttr.,  லண்டனில் ஷ்பெக்ரம்  கானக்குயில் என உலகெங்கும் விரியும் இத்தனை ஒலி குயில்களும் கூவ ஆரம்பித்தது இலங்கை வானொலியில்தான்.   

இப்படி இலங்கை வானொலி பற்றி இப்பொழுதான்  கொஞ்சம்  கொஞ்சமாக  அங்கு கூவ ஆரம்பித்திருக்கும் இந்த இளம் குயில் இன்னும் ஏராளமாக சொல்லிவிடுவது அவ்வளவு சுலபமில்லை, இருந்தாலும் இலங்கை வானொலி வரலாற்றில் சில முக்கியமான தருணங்களை ஞாபக படுத்தலாம் என்று நினைக்கிறேன்...
இலங்கையில் ஒலிபரப்பு வரலாறு........... 1923 ஆம் ஆண்டு அதாவது ஐரோப்பாவில் ஒலிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இலங்கை தந்தி திணைக்களம் பரீட்சாத்த ஒலிபரப்பை ஆரம்பித்தது.
ஜெர்மன் நீர்மூழ்கி  கப்பல்  ஒன்றிலிருந்து கைப்பற்றபட்ட உதிரி பாகங்களை கொண்டு ஒரு சிறிய ஊடுகடத்தி (Transmeter) அமைக்கப்பட்டது.

பின்னர் குறைந்தளவு உபகரணங்களை  வைத்துக்கொண்டு மத்திய தந்தி அலுவலகத்தின் கட்டத்தில் அமைந்த , ஒரு சிறிய அறையில் வைக்கப்பட்ட இந்த ஊடுகடத்தி(Transmeter) மூலம் பொதுமக்களுக்கான முதலாவது பரீட்சாத்த ஒலிபரப்பு 1924 பெப்ரவரி 22 ஆம் திகதியிலும் பின்னர் இறுதி பரீட்சாத்த ஒலிபரப்பு அதே வருடம் ஜூலை 27 ஆம் திகதியும் இடம்பெற்றது .அதன் பின்பு நிகழ்ச்சிகள் வாரத்துக்கு இரு முறை அல்லது மும்முரைகள் ஒழுங்கற்ற முறையில் ஒலிபரப்பபட்டது. புதிய ஊடுகடத்தியின்(Transmeter) உதவியுடன் , ஒழுங்கமைந்த ஒலிபரப்பு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இத்தினத்தை இலங்கை ஒலிபரப்புத்துறையின் அங்குரார்ப்பன தினமாக குறிப்பிடலாம்.

இலங்கை ஒலிபரப்பு துறையில் முக்கிய நிகழ்வுகள்.

1925.12.16 தேசாதிபதி சேர் கியூ கிளிபோட்டினால் ஒலிபரப்பு அங்குரார்ப்பணம்     செய்யப்பட்டது. 
1931.05.31 பாடசாலை ஒலிபரப்பு ஆரம்பமானது
1949.10.01 ஒலிபரப்பு திணைக்களம் 'ரேடியோ சிலோன்' ஆக மாற்றப்பட்டது.

1967.01.05 இலங்கை ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது

1979.04.12 முதலாவது  பிராந்திய சேவை அனுராத புரத்தின் ரஜரட்டையில்   ஆரம்பிக்கப்பட்டது.
1981.1015 மகாவலி சனசமூக ரேடியோ சேவை பேராதனையில்   ஆரம்பிக்கப்பட்டது .

 1981.08.26 F.M ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது
                    யாழ்ப்பான பிராந்திய சேவை ஆரம்பிக்கபட்டது ( இப்போது பலாலி).

1983.04.13 கண்டி மஹாநுவர சேவை ஆரம்பிக்கபட்டது.
1986.04.11கிரந்துருகொட்டே சனசமூக சேவை ஆரம்பிக்கபட்டது .
1989.11.03 நகர்புற ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது .(CITY FM)
1992.02.25 ஐரோப்பா , அமெரிக்க ஆகிய தேசங்களுக்கான உலக சேவை            நான்கு மணிக்கு. ஆரம்பிக்கபட்டது
1993.02.01வன்னி ஒலிபரப்பு ஆரம்பிக்கபட்டது .

                                                இலங்கை வானொலி  .